கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில் சிலருக்கு மாதங்கள் கடந்த நிலையில் இதய பாதிப்பு ஏற்பட்டதும், கொரோனா தீவிரமடையாதவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலேயே இவ்வாறான பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் த வால் ஸ்டிரீட் மருத்துவ இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.அதில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, இதய கோளாறுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் பிறக்கும்போது இருந்த இதயத்தின் தசை செல்களுடன்தான் நாம் பெரும்பாலும் இறக்கிறோம், எனவே, இதய தசைகளில் உள்ள செல்கள் இறக்க நேரிடும் வகையில் ஏதேனும் நடந்தால், அது மீளமுடியாத, இதயத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை பாதிக்கும் என்று வோஷிங்டனில் உள்ள இதய மருத்துவத் துறை இயக்குநர் சார்லெஸ் முர்ரே தெரிவித்துள்ளதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவ கால காய்ச்சல் மற்றும் இதர தொற்றுநோய்களுக்குப் பிறகு கூட சில நோயாளிகளுக்கு நெஞ்செரிச்சல், இதயத் துடிப்பில் சீரற்றத் தன்மை, ஏன் இதய செயலிழப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கொரோனா பாதித்து பலியானவர்களுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வில், இதய நாளங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவியிருந்ததும், அதே சமயம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் இதயத்தை பரிசோதித்த போதும் கிடைத்த தகவல்களும் இந்த ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.



