பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இங்கு இதுவரை 11 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 772 பேரை பலிகொண்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அரசு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசின் பீதிக்கு மத்தியில் பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் சமர் தீவை அம்போ என்ற சக்தி வாய்ந்த புயல் மிரட்டி வருகிறது. சமர் தீவின் கிழக்கு பகுதியில் சான் பொலிகார்போ நகரில் நேற்று இந்த புயல் தாக்கியது. பலத்த சூறவாளி காற்றுடன் பேய் மழை கொட்டி தீர்த்தது. எனினும் புயலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

அம்போ புயல் விரைவில் சமர் தீவை முழுமையாக தாக்கும் எனவும், இதனால் பெரும் அளவில் சேதம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சமர் தீவில் உள்ள சுமார் 4 லட்சம் பேரை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் முறையாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சமர் தீவில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here