செல்லிடத் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளிலும் ரூபாய் தாள்கள் போன்ற காகிதங்களிலும் கொரோனா வைரசை அழிக்கும் வகையிலான தானியங்கி கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organization – Delhi) உருவாக்கியுள்ளது.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்னணு மற்றும் காகிதப் பொருட்களில் கொரோனா அழிப்புக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு புற ஊதா கதிர் அடிப்படையிலான கருவி உருவாக்கியுள்ளது.
தானியங்கி முறையிலான இந்த கருவியில் செல்லிடத் தொலைபேசி, ரூபாய் தாள்களை வைத்து மூடிவிட வேண்டும். அதனுள் 360 பாகை கோணத்தில் புற ஊதா கதிர்கள் பாய்ந்து அவற்றிலுள்ள கொரோனா வைரஸ் அழிக்கப்படும்.
கொரோனா வைரஸ் அழிப்பு பணி நிறைவடைந்த பின்னர், அந்த கருவியானது தானாகவே தனது செயல்பாட்டை நிறுத்தி விடும். அந்த கருவி அருகே எவரும் காத்திருக்கத் தேவையில்லை.
கைத்தொலைபேசிகள், ஐ-பாட்கள், மடிக்கணினிகள் போன்ற மின்னணு பொருட்களிலும், ரூபாய் தாள்கள், காசோலைகள், வங்கிச் சிட்டைகள் உள்ளிட்ட காகிதப்பொருட்களில் உள்ள கொரோனா வைரஸ்களை அழிப்பதற்கு இது உதவும் கூறப்பட்டுள்ளது.



