வாக்களிக்க வரமாட்டார்கள் என நினைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமது வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பில் இன்றைய தினம் ஈடுபட்டு தமது வாக்கினை பதிவு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சமடைந்து மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தவர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
அவர்களின் எண்ணத்திற்கு மாறாகப் பெருமளவானோர் வாக்களித்திருப்பதன் ஊடாக ஜனநாயகம் வெற்றியடைந்துள்ளது.
அதிலும் இவ்வாறானவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய மக்கள் சக்திக்காக தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளும் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் தமது பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
எது எவ்வாறெனினும் கொழும்பு உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் தற்போதுவரை பெறப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றது.
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.
வவுனியா
அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 141 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெற்றிருந்தது.
அதன்படி காலை7 மணியிலிருந்த மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், பேருந்துகள் மற்றும் வாகனங்களின் மூலம் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் கடுமையான பாதுகாப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், சில வீதிகளூடான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.



