கொவிட்-19 தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “1904” குறுஞ்செய்திச் சேவை தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய, கொவிட் தொற்றாளர்கள் பின்வரும் பிரச்சினைகள் தொடர்பில் அதன் குறியீட்டை இடுவதன் மூலம் குறுஞ் செய்தியினை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- A-சுவாசிப்பதில் சிக்கல் நிலை
- B-காய்ச்சல் நிலை
- C-எவ்வித அறிகுறியும் இல்லை
உதாரணமாக: காய்ச்சல் நிலை
B<இடைவெளி>வயது<இடைவெளி>தே.அ.அ.<இடைவெளி>முகவரி
என குறிப்பிட்டு, 1904 இற்கு குறுஞ் செய்தி அனுப்ப வேண்டும்.
குறுஞ்செய்தி மூலம் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தினால், உரிய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான வைத்தியர் குழாம் அனுப்பி வைக்கப்படும்.
இதற்காக அம்பியூலன்ஸ் வண்டி சேவை உள்ளிட்ட ஏனைய சிகிச்சை வசதிகளும் வழங்கப்படும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கு, வைத்தியர் குழுவொன்று 1390 எனும் அதற்கான பிரத்தியேக இலக்கத்தின் மூலம், தொலைபேசி அழைப்பின் ஊடாக தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு உரிய சேவை வழங்கப்படுமென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.



