முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிர் செய்யப்படாத மக்களுடைய காணிகள், திணைக்களங்களின் பிடியில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்களை தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திடம் படையினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வண்ணம் தரிசாக இருக்கும் நிலங்கள் முழுவதனையும் செய்கைக்கு உட்படுத்த வேண்டும் என கடந்த மாதம் ஜனாதிபதி செயலணியில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே தற்போது முல்லைத்தீவில் படையினர் காணிகளின் விபரத்தினை கோரியுள்ளனர்.
குறித்த விபரத்தினை சமர்ப்பிக்குமாறு படையினர் கோரியிருப்பது தொடர்பில் மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கையில் , மேற்படி தரவினை படையினர் கோரியிருப்பதனை உறுதி செய்ததோடு இதில் தனியார் செய்கை மேற்கொள்ளாத நில விபரம் கைவசம் இல்லை எனவும்அதனை உடன் திரட்டும் சாத்தியமும் கிடையாது என்றும் கூறியுள்ளனர்.
அதேநேரம் தனியாருக்கு வழங்கிய நிலையிலும் திணைக்களங்களின் பிடியில் உள்ள நில விபரங்கள் மட்டுமே உடன் சேகரிக்க முடியும் என்பதுடன் அந்த விபரங்களையே படையினருக்கு வழங்க முடியும் எனவும் பதிலளித்தனர்.



