இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இஸ்ரேலிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு வீட்டு பணி பெண் சேவை மற்றும் விவசாய பிரிவு தொழில் வாய்ப்புக்காக இலங்கையர்கள் கடந்த காலங்களில் தனியார் துறையின் மூலம் அனுப்பப்பட்டார்கள் இலங்கையர்களிடம் உள்நாட்டில் உள்ள தொழில் முகவர்கள் பெருந்தொகை பணத்தை இதற்காக அறவிடுவது தொடர்பான தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேல் அரசாங்கம் நாட்டின் தொழில் முகவர்கள் மூலம் அந் நாட்டுக்கு பணியாளர்களை அழைப்பதை இடை நிறுத்தி இலங்கை பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் மாத்திரம் அழைப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் பங்களிப்புடன் அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையின் காரணமாக எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் இஸ்ரேல் நாட்டிற்கு இலங்கை பணியாளர்களை அனுப்புவதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இதன் காரணமாக இஸ்ரேலிற்கு இலங்கை பணியாளர்களை அனுப்பும் பிரச்சாரங்களில் ஏமாந்துவிடக்கூடாது என்று அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்திற்கு அமைவாக ஏனைய நாடுகளுக்கு பல்வேறு தொழிலுக்காக இலங்கையர்களை அனுப்பும் பணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்று இதன் போது வலியுறுத்தப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரிடம் பல்வேறு சேவைகளுக்கு என கூறி முகவர்கள் பணத்தை அறவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்திய பரிசோதனைக்காக மாத்திரமே பணம் அறவிடப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.



