வன்னியில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவடைந்தது.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேசத்திலுள்ள விடுதலைப்புலிகளின் அமைப்புகளுக்கும் இங்கு ஏதாவது ஒரு விடயத்தை விற்பனை செய்யாவிட்டால் அவர்களால் தொடர்ந்தும் இயங்கமுடியாது. கூட்டமைப்பினரின்  பலரது பிள்ளைகள் இன்று மேற்குலக நாடுகளில் உள்ளனர்.

அவர்களை அங்கு கவனிக்க வேண்டுமென்றால் இங்கு இதுபோன்ற பிரச்சினைகளை விற்பனை செய்ய வேண்டும். அதேபோல் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரிச் சென்றுள்ளவர்கள் இங்கு பிரச்சினை இல்லை என்றால் திருப்பியனுப்பப்படுவார்கள்.

ஆனாலும் அங்கு அவர்களின் பிள்ளைகள் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கற்றுவருவதால் மீள நாட்டுக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முயற்சித்தவர்களை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொன்றார்கள். கிராமங்களுக்குச் சென்று மக்களை பணயக் கைதிகளாக்கினர்.

அவ்வாறு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டவர்களே இறுதியில் இயக்கத்தால் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்கவேண்டும்.

வடக்கிலுள்ள மக்கள், காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவார்கள். போர்க்குற்றம் என்ன என்பதையும் அறிவார்கள்.

எனினும், அந்த மக்களைப் பட்டியல்படுத்தி வந்து போராட்டம் செய்யும்படியும், நட்டஈட்டை வழங்கித் தருவதாகவும் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் அவர்களைப் போராட்டத்தில் அமர்த்தியுள்ளனர்.

இந்தப் போராட்டம் நிதியுடன் தொடர்புடையதாக உள்ளது. தொடர்ந்தும் அதனை அவர்கள் செய்வார்கள். எனவேதான் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் எமது நாடு நிராகரித்தது. மிச்செல் பச்லெட் அம்மையார் அமெரிக்காவின் கைப்பாவை.

அமெரிக்க உதவியுடன்தான் அவர் அந்த அரியாசனத்தில் இருக்கின்றார். சிலி நாட்டின் அதிகாரத்தை அமெரிக்காவின் உதவியைப் பெற்று எப்படி வீழ்த்தி ஆட்சிக்கு வந்தாரோ அதே தோரணையில் இன்று எமது நாட்டின் மீதும் பல அழுத்தங்களை அவர் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளார் – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here