இலங்கையில் டெல்டா தாக்கத்தின் பின்னர், மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்
டெல்டா வைரஸ் தாக்கும் பட்சத்தில், எந்தவித அறிகுறிகளும் இன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவிக்கின்றார்.
இந்த நிலைமையானது, மிகவும் பாரதூரமானது என அவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த சில வாரங்களில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 20திற்கும் அதிகமான நோயாளர்களுக்கு அவசர சத்திர சிகிச்சைகளை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த வைரஸ் தாக்கத்தின் பின்னர், ஏதேனும் இருதய சார் நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுமாக இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளை நாடுவது மிகவும் சிறந்தது என டொக்டர் கோட்டாபய ரணசிங்க குறிப்பிடுகின்றார்.
கொவிட் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளில் இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என கூறிய அவர், மூன்றாவது அலையில் ஏற்பட்ட டெல்டா தாக்கத்தின் பின்னரே இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு இருதய சார் நோய்களுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் வயது குறைந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அத்துடன், இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இல்லாதவர்களே இவ்வாறான நோய் தாக்கங்களுக்கு உள்ளாவதாகவும் டொக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். ..



