நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
ராகமை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை குறையாமையினாலேயே, தான் இவ்வாறு கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூகத்திற்குள் டெல்டா பிறழ்வு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.
நாளாந்தம் 5000 வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமையினால், சமூகத்திற்குள் சுமார் 50,000 வரையான தொற்றாளர்கள் இருக்கக்கூடும் எனவும் அவர் கூறுகின்றார்.
அதனால், தற்போது அமுல்பபடுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இரண்டு வாரங்களுக்கு நீடித்தால், வைரஸ் பரவலை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
நாட்டை முடக்கினாலும், கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவடைவதற்கு சுமார் ஒரு மாத காலம் தேவை என கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.



