அகில இலங்கை சுயதொழில் முயற்சியாளர் தேசிய முச்சக்கரவண்டிச் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன, மிரிஹான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 08 பேரைக் கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவருக்குச் சொந்தமான முச்சக்கரவண்டிக்கு தவணைக் கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து, லீசிங் நிறுவனத்தினால் முச்சக்கரவண்டி கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரிக்க சுனில் ஜயவர்தனவும் மற்றுமொருவரும் குறித்த லீசிங் நிறுவனத்திற்கு நேற்று (10) பிற்பகல் புறப்பட்டுச் சென்றிருந்தபோது, அங்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அங்கு சுனில் ஜயவர்தன மீது ஒருவர் பொல்லால் தாக்கியதை தொடர்ந்து, இதில் காயமடைந்த அவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த 53 வயதான அவர் அங்கு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



