வட்டவளை பிரதேசத்தின் ஏழு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 100க்கு மேற்பட்டோர், அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிதி தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறி, ஹட்டன்-கொழும்பு – பிரதான வீதியை மறித்து, இன்று (9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோலினா, தெபட்டா, அகரவத்தை, மவுன்ஜீன், வட்டவளை, ரொசல்ல, உள்ளிட்ட ஏழு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் வரையானவர்களுக்கு, 5,000 ரூபாய் பிரச்சினை காணப்படுவதாகவும் ஆரம்பத்தில் இருந்து 5,000 ரூபாய் கிடைக்காத பலர் உள்ளனர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில், மே 14ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்று அம்பகமுவ பிரதேச செயலகத்தின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும் எனினும் அதற்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை திருப்பியனுப்பிய வட்டவளை பொலிஸார், வட்டவளை கிராம உத்தியோகத்தரையும் சமூர்த்தி உத்தியோகத்தரையும் காரியாலயத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.



