இணையத்தளத்தின் ஊடாக விளம்பரமொன்றை வெளியிட்டு, இந்திய பிரஜைகளை இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிங்கப்பூர், சவூதி உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காக செல்லும் இந்திய பிரஜைகள், வேறொரு நாடொன்றில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

இந்த விடயத்தை அறிந்துக்கொண்ட இலங்கையிலுள்ள சில வர்த்தகர்கள் மற்றும் சிவில் விமான சேவை அதிகார சபையிலுள்ள சில அதிகாரிகள் இணைந்து, இதனை வர்த்தகமாக முன்னெடுக்க முயற்சித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தினால் இலங்கை மக்களே பாதிக்கப்பட போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில், சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் டி.வி.ஷானக்க,

சிவில் விமான சேவை நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என கூறிய அவர், அது தொடர்பில் விசாரணை நடத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் விமான சேவைக்கு தனிமைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படவில்லை என கூறுகின்றார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here