பன்னிப்பிட்டியில் லொரி சாரதி மீது தாக்குதல் நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியை 500,000 ரூபாய் சரீர பிணையில் விடுவித்து நுகேகொடை நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (5) உத்தரவிட்டார்.
என். ரிஃபிதீன் என்ற பொலிஸ் அதிகாரியே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகரகம போக்குவரத்து பிரிவு அதிகாரி விக்ரமதுங்க (56816) தெரிவித்தார்.
முந்தைய விசாரணையின்போது சந்தேகநபரின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும், அடுத்த விசாரணையில் அறிக்கையை சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் பதுளையில் வசிக்கும் பிரவீன் என்ற தமிழ் இளைஞரே பாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


