டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார்.
விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. அப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது.
இந்நிலையில், எஞ்சிய பகுதிகளை சென்னையில் கிரீன் மேட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படமாக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்த அஜய் ஞானமுத்து, அவ்வாறு நடத்த சாத்தியமில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதன்முலம், கோப்ரா படக்குழு கொரோனா ஊரடங்கு முடிந்தபின் மீண்டும் ரஷ்யாவில் எஞ்சிய காட்சிகளை படமாக்கும் என தெரிகிறது.



