வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவ புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள சீனா நிறுவனத்தினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதையில் சீனா மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெருமளவில் வசித்து வரும் வவுனியா மாவட்டம் அந்நிய சக்திகளினால் அபகரிக்கப்பட்டு வருவதையும், அந்நிய மொழிகளான சீனா மற்றும் ஹிந்தி மொழிகள் வவுனியா நகரை அலங்கரித்து வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக வன்னி மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் எவரும் வாய் திறக்கவில்லையெனவும், எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி வீதியிலுள்ள உணவகமொன்றில் உணவகத்தின் பெயர்ப்பலகையில் ஹிந்தி மொழியை உள்ளடக்கி உள்ள நிலையில் பொது அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள் எவையும் கண்டுகொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய நாடுகளின் பிரதான மொழிகள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை அபகரித்து செல்வதற்கு எதிராக நகரசபை , மாவட்ட செயலக அதிகாரிகள் இவ்விடயத்தில் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




