2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையகம், நாட்டின் பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பாக சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேற்று அது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு நடத்துவது, விடுதிகளை எவ்வாறு நடத்துவது, பரீட்சைகள் நடத்துதல், கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்து இந்த சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது, பல்கலைக்கழக வளாகங்களை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இவ்வாறிருக்க சுகாதார வழிகாட்டுதல்களின்படி நேற்றைய தினம் இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை நடவடிக்கைகளை நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடத்திட்டத்தை செயற்படுத்துவதில் ஆசிரியர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here