விடுதலைப் புலிகளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக கூறி கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஆகியோரை நாளை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கிளிநொச்சி பொலிசார் அறிவித்தல் அனுப்பியுள்ளனர்.
சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் 8 ஆம் திகதியன்று இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் பசுமைப்பூங்கா வளாகத்தில் நடாத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கன்னியின் உருவப்படமும், விடுதலைப் புலிகளின் சீருடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததாக கொக்காவில் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில், கடந்த மார்ச் 13ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் , அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விசாரணை நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைக்காக பொலிஸாரால் இன்று இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



